செய்தியாளர்: தி.கார்வேந்த பிரபு
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் செல்வமணி (47). இவர், சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த நிலையில், தனது நண்பர்களுடன் நேற்று சபரிமலை சென்றார். இதையடுத்து அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று மாலை படிவழிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற செல்வமணி, வரிசையில் காத்திருந்தார்.
அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மீட்டு திருக்கோயில் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சாவுர் போன்ற முக்கிய கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பழனி கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.