தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.39 ஆயிரத்து 565 கோடி தேவை என்றும் முதல் கட்டமாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் எனவும் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு போதிய மழை பெய்யாததாலும், காவிரியில் இருந்து நீர் திறக்கப்படாத காரணத்தினாலும் கடும் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவானது. இதனால் ஏற்பட்ட மனவேதனையால் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்கதையாகி வந்தது. இதனையடுத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து அதன் அறிக்கையை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில் முதலமைச்சர் சார்பில் பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், வறட்சியை சமாளிக்க ரூ.39,565 கோடி தேவைப்படுவதாகவும், அதனை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் முதற்கட்டமாக உடனடியாக ரூ.1000 கோடியை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் வறட்சியால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பவும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
முதலமைச்சரின் கோரிக்கை மனுவை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பிரதமர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.