தமிழ்நாடு

இருவருக்கு ஒரே எண் கொண்ட பான் கார்டு !

Rasus

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இரண்டு பேருக்கு, ஒரே எண் கொண்ட பான் கார்டு வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சமயபுரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் தனிநபர் கடன் கோரி விண்ணப்பித்து உள்ளார். இதனையடுத்து அவரது ஆதார், பான் கார்டு உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு உள்ளது. அப்போது வருமான வரித்துறையினரால் செந்தில்குமாருக்கு வழங்கப்பட்ட பான் கார்டு எண், அதே வங்கியின் மற்றொரு வாடிக்கையாளரான கீழவாளாடியைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், சம்பந்தப்பட்ட அந்நபரை நேரில் சென்று சந்தித்து நிலைமையை கூறியுள்ளார். அப்போதுதான், அந்நபர் பெயரும் செந்தில்குமார் என்பதும், இருவரின் பிறந்ததேதி, தந்தை பெயர் என அனைத்தும் ஒன்றே என்பதும் தெரியவந்துள்ளது. இது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதும், இவ்விவகாரத்தால் ஊதியப்பிடித்தம் உள்ளிட்டவற்றில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக இருவருமே அச்சம் தெரிவிக்கின்றனர். இக்குளறுபடிக்கு யார் பொறுப்பு என்பது குறித்து, வருமானவரித்துறை அதிகாரிகளிடம் முறையிட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.