செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
கிருஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. தவக்காலத்தின் நிகழ்வாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் சிலுவை பாதை நடைபெற்றது. தவக்காலத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று குருத்தோலை ஞாயிறோடு தவக்காலத்தினுடைய புனித வார நிகழ்வுகள் தொடங்கி இயேசு கடைசி நேர நிகழ்வுகளை தியானிக்கக் கூடிய நிகழ்வாக இந்த நாட்களில் இருக்கின்றன.
இந்நிலையில், தவக்காலத்தில் முக்கிய நிகழ்வாக கருதக்கூடிய குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களிலில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி ஹோசன்னா கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.