தமிழ்நாடு

பல்லடம்: இரும்பு உருக்கு ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - போராடி அணைத்த வீரர்கள்

webteam

பல்லடம் அருகே தனியாருக்குச் சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூன்றுமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், குடோனில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை தயாரிக்க பயன்படுத்தும் பழைய சிலிண்டர்கள், கார் இஞ்சின், இயந்திர உதிரி பாகங்கள், தார் மற்றும் எண்ணெய் கேன்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென எரியத் தொடங்கியது.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர், மூன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்து மூன்றுமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதைத் தொடர்ந்து தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.