கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு  pt desk
தமிழ்நாடு

பழனி | மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பழனி அடிவாரத்தில் உள்ள கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்ப்பு.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பழனி அடிவாரம் திருவாவினன்குடி கோயில் எதிரே உள்ள சன்னதி வீதியில் உணவகங்கள், பூஜை சாமான் விற்பனை கடை, டீக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை சன்னதி வீதியில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடைகளின் முன்பகுதியில் பற்றி எரிந்த தீயை அனைத்த நிலையில், பூஜை சாமான் கடை என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து கடைக்குள் இருந்த தீப எண்ணெய், நெய், சூடம், பத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களில் தீப்பிடித்து எரிந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை நடந்த விபத்து என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.