விஜய் - பா. ரஞ்சித் Pt web
தமிழ்நாடு

நீங்கள் நீட் எதிர்ப்பாளர் தானே? எதுக்கு ஒடுக்குறீங்க? - முதல்வர் குறித்து பா. ரஞ்சித்

நீங்க நீட் எதிர்பார்ப்பாளர் தானே. நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்ளை உடைய நீங்க போராடும் இளைஞர்களுக்கு ஒரு இடத்தை கொடுங்க. மாணவர்கள் அறவழியில் போராடட்டும் - பா. ரஞ்சித்

Premkumar S

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்ற நிலையில், அவர்களின் மீது காவல்துறை காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து, டெல்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தான், இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இன்று எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா. ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பா. ரஞ்சித்

தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசும்போது, ”தலித்கள் இட ஒதுக்கீடுகள் மூலம் படிப்பதாக பேசுகிறார்கள். ஆனால், நீட் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்று இருந்தாலும், பணம் இருந்தால் மருத்துவம் படிக்க முடியும் என்றால் அதை ஏன் கேள்வி கேட்கவில்லை? நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற குரலை இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டியுள்ளது. நீட் சமத்துவத்திற்கு எதிரானது. அதனால் தான் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள். பாஜக, மாணவர்கள் போராடுவதை ஒடுக்குகிறது. தமிழக அரசு ஏன் ஒடுக்க வேண்டும்.

பாஜக சமத்துவத்திற்கு எதிரான கட்சி. ஆனால் நீங்கள் ஏன் மாணவர்களை அடிக்கிறீர்கள்? முதலமைச்சர் ஏன் அந்த வீடியோவை பார்க்கவில்லையா?. மாணவர்களை அடிப்பதை எப்படி வேடிக்கை பார்க்கிறீர்கள்? மாணவர்கள் போராட ஒரு இடத்தை அரசே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மக்களோடு சேர்ந்து இருக்கும் முதல்வராக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். நீட்டை வெறும் வாய் வார்த்தையாக மட்டுமின்றி, எங்களுடன் சேர்ந்து நீங்கள் (முதலமைச்சர்) போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.