தமிழ்நாடு

முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் பா. ரஞ்சித் மனு

முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் பா. ரஞ்சித் மனு

webteam

ராஜராஜசோழன் குறித்து பேசிய விவகாரத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ப‌ட்டுள்ள நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ரஞ்சித், தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கியது என்ற குற்றச்சாட்டை ரஞ்சித் முன்வைத்திருந்தார். இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ரஞ்சித்தின் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் கருத்து குறித்து திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளார். 1‌53, 153A ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலகத்தை ‌தூண்டும் வகையில் பேசுவது, சாதி, மதம், மொழி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசியது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரஞ்சித் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விரைவில் விசாரிக்கவுள்ளது. அத்துடன் ராஜ ராஜ சோழன் பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள ரஞ்சித், “எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேவும் பிரிவை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன். என்னுடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நில உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.