பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த மூதாட்டிகளில் ஒருவரான ரங்கம்மாள் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள் தங்கம்மாள் மற்றும் ரங்கம்மாள் காளி. இவர்கள் கடந்த மாதம் மருத்துவ செலவுக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தனது சகோதரரிடம் வழங்கியுள்ளனர். அதனை கண்ட சகோதரர் அதிர்ச்சி அடைந்தார். பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமலேயே பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் சுமார் 46 ஆயிரம் வரை வைத்திருந்தனர்.
இந்த செய்தி ஊடகங்களில் வைரலாகப் பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் இவர்களை நேரில் அழைத்து முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார். மேலும் மருத்துவ செலவிற்கு அரசு தரப்பில் உதவி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். அத்துடன், சென்னையை சேர்ந்த அறக்கட்டளை ஒன்றின் சார்பில் அவர்கள் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கேற்றவாறு 46 ஆயிரம் ரூபாயிற்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிலையில், மூதாட்டிகளுள் ஒருவரான ரங்கம்மாள் இன்று காலை உயிரிழந்தார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.