தமிழ்நாடு

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..?

webteam

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, ஜாமீன் மறுக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவில், வழக்கிற்கு சம்பந்தமில்லாத தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு கைதான டெல்லி வழக்கறிஞர் ரோஹித் டாண்டன் என்பவருக்கு உச்ச நீதிமன்‌றம் கடந்த 2017 செப்டம்பர் 10 ஆம் தேதி ஜாமீன் வழங்க மறுத்தது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கெயித், இதற்காக உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின் ஒரு பத்தியை அப்படியே எடுத்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு காரணமாக கூறி இருக்கிறார். 

அதில் ஒரு பத்தியில், சுமார் 31 கோடியே 75 லட்சம் ரூபாய் முறைகேடாக பெறப்பட்டு, கோடக் மஹிந்திரா வங்கியின் எட்டு கணக்குகள் ஒரு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பத்தி அப்படியே உச்ச நீதிமன்றம் 2016-ஆம் ஆண்டில் பிறப்பித்த ஒரு உத்தரவில் இடம்பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.