தந்தையை தாக்கிய மகன்
தந்தையை தாக்கிய மகன் புதியதலைமுறை
தமிழ்நாடு

திருவாரூர்: இரவு நேரத்தில் மாமனார், அடியாட்களோடு வீடு புகுந்து தந்தையை கடுமையாக தாக்கிய மகன்!

யுவபுருஷ்

செய்தியாளர் - மாதவன்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே தாமரை நகரை சேர்ந்தவர்கள் ராஜா - விஜயா தம்பதி. இவர்களுக்கு தமிழழகன் என்ற மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த 2022ம் ஆண்டு தமிழழகனுக்கு சிந்துஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தந்தை ராஜா தனது மகன் தமிழழகனுக்கு தொழில் செய்வதற்காக நிலத்தை விற்று 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால், தமிழழகனோ எந்த தொழிலும் செய்யாமல் ஊதாரித்தனமாக அந்த பணத்தை செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தந்தை ராஜா விளக்கம் கேட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, தனது இளைய மகளுக்கு திருமணம் செய்துவைக்க ராஜா முயன்று வரும் நிலையில், அவரது வீட்டை, மருமகன் தமிழழகன் மற்றும் மகள் சிந்துஜா ஆகியோருக்கு எழுதி தருமாறு தமிழழகனின் மாமனார் வற்புறுத்தியுள்ளார். இதற்கு ராஜா சம்மதம் தெரிவிக்காததால், மாமனார் மற்றும் அடியாட்களுடன் வீட்டுக்கு சென்ற தமிழழகன், பூட்டை உடைத்து தனது தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

தமிழழகன் தனது தந்தையை அடித்து உதைக்க, மறுபுறமோ அவரது மனைவி, தங்கையின் முடியைப்பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதனால், காயமடைந்த குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து ராஜா மற்றும் குடும்பத்தினர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜா, தனது மனைவி மற்றும் மகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளார்.