தமிழ்நாடு

கோவை: பெரும் தொல்லையாக மாறிய நாய்கள்... 6 மாதங்களில் 4,400 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

webteam

கோவை மாநகர் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நாய் கடிக்கு 4,400-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

கோவையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவுநேரம் பணி முடிந்து வரும் பொதுமக்களுக்கு மிகுந்த தொந்தரவை தருகின்றது. வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி செல்வதால், பதட்டத்தில் நிலை தடுமாறி வாகனங்களில் இருந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக உக்கடம் புல்லுக்காடு, G M நகர், கரும்புக்கடை, பீளமேடு போன்ற பல்வேறு இடங்களில் பிரச்னை தொடர்கதையாக உள்ளது.

அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில், 4400-க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்மலா கூறுகையில், கோவை அரசு மருத்துவமனைக்கு நாய் கடித்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களுக்கு முதலில் டிடி தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், தொடர்ந்து நாய் கடிக்கான தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பின்னர் 1, 3,7, 14, 30 நாட்கள் கால இடைவெளியில் ஊசி செலுத்தப்படும் என்றும், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 13 ஆயிரத்து 153 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.