விபத்துகளைத் தவிர்க்க வேண்டுமென்ற நோக்கில் வைக்கப்படும் தீத்தடுப்பு கருவிகள், அதன் நோக்கத்தை நிறைவேற்றாமல் போனால் அவை பயனில்லாமல் போகும். அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீத்தடுப்பு உபகரணங்களை வெறும் சம்பிரதாயத்துக்காக வைக்கும் போக்கு பல இடங்களில் இருக்கிறது. அதற்கு தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழும் சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் விதிவிலக்கல்ல.
சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மருத்துவமனையில், தீத்தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கையாள்வது யார், ஆய்வு செய்வது யார் என தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்த கேள்விக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்கிறார் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன்.
அவர் சுட்டிக்காட்டிய தீத்தடுப்பு உபகரணங்களின் நிலை என்ன என்பது குறித்து புதிய தலைமுறை ஆய்வு நடத்தியது. அதில், மருத்துவமனையின் 6 தளங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் தீயணைப்பான்கள் அனைத்தும் கடந்த பிப்ரவரி மாதத்தோடு காலாவதியானது தெரியவந்துள்ளது. இதனால் தீவிபத்து நேரும் காலங்களில் அந்த தீயணைப்பான்கள் பயன்படாமல் போகும் ஆபத்து இருக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில், "உயர் அதிகாரிகளும், பொறியாளர்களும் அவ்வப்போது கட்டடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வுகள் நடந்திருந்தால், காலாவதியான தீத்தடுப்பு உபகரணங்கள் அங்கு தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதன் மூலம் மருத்துவர்களின், நோயாளிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.