தமிழ்நாடு

பிற மாநில வாகனங்களுக்கு தடை.. 22ம் தேதி அரசுப் பேருந்துகள் ஓடாது: முக்கிய அறிவிப்புகள்

பிற மாநில வாகனங்களுக்கு தடை.. 22ம் தேதி அரசுப் பேருந்துகள் ஓடாது: முக்கிய அறிவிப்புகள்

rajakannan

பிற மாநிலங்களிலிருந்து வாகனங்கள் தமிழகத்திற்குள் வர மார்ச் 31 வரை தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2‌23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 31ம் தேதி பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் காலை 7 மணி 9 வரை தானாக முன்வந்து ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து, மார்ச் 22ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் இயங்காது, மளிகைக் கடைகள் இருக்காது என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. மெட்ரோ ரயில் சேவையும் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வாகனங்கள் தமிழகத்திற்குள் வர மார்ச் 31 வரை தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்து உள்ளிட்டவற்றைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. இதனையடுத்து, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசுப் பேருந்துகள் இயங்காது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் நூலங்கங்கள் மார்ச் 31ம் தேதி வரை செயல்படாது எனவும் அவர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை தமிழக மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, சுய ஊரடங்கு காரணமாக மார்ச் 22ல் தமிழகத்தில் லாரிகள் இயங்காது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.