தமிழ்நாடு

மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு வேலூர் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை.. சென்னை பறந்த இதயம்!

webteam
விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள் தானம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் அடுக்கபாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. உறுப்புகளை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(46). இவருடைய கணவர் முருகன் என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது 2 பெண் பிள்ளைகளையும் கலைச்செல்வி கூலிவேலை செய்து படிக்கவைத்து வந்துள்ளார். இந்த நிலையில், கலைச்செல்வி கடந்த 1ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்துச் சென்றபோது பின்பக்கம வந்த இருச்சக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை மூளைச்சாவு அடைந்துள்ளார். 
இவரது இதயம் உட்பட உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது. இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இரண்டு கண்கள் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல்முறையாக அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உடல் உறுப்புகள் மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.