இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.