O. Panneerselvam
O. Panneerselvam Twitter
தமிழ்நாடு

மேடையேறி மாஸ் காட்டிய ஓபிஎஸ் - தொண்டர்களின் கரகோஷத்தால் அதிர்ந்த திருச்சி விழா திடல்!

Justindurai S

அதிமுக தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர். அதன்படி திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் தற்போது மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்த நாள் விழாக்கள், அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ்பாண்டியன், அய்யப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மேடையில் சிறப்புரையாற்றி வருகிறார். முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் மேடை வந்ததும் தொண்டர்களின் கரகோஷத்தால் விழா திடல் அதிர்ந்தது.

மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். மாநாட்டு மேடை அதிமுக தலைமை அலுவலக முகப்பு தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் இடம் பெற்றுள்ளன.