தமிழ்நாடு

‘தலைமையேற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள்‘ - மதுரையில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்

kaleelrahman

அதிமுக உண்மை தொண்டர்கள் என்ற பெயரில் ஒபிஎஸ்-க்கு ஆதரவாக மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அதிமுகவின் உண்மை தொண்டர்கள் என்ற பெயரோடு, ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசீர்வதிப்பதுபோல படங்களை அச்சிட்டு, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே ஒற்றைத் தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள் என்ற வாசகங்களோடு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கட்சியின் நிர்வாகிகள் சிலர் இபிஎஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய நிலையில், அதிமுக உண்மை தொண்டர்கள் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.