செய்தியாளர்: ராஜன்
தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து இவரது உடல் இன்று திருநெல்வேலியில் அடக்கம் செய்யப்பட்டது. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார்.
இதையடுத்து கார் மூலம் திருநெல்வேலி சென்ற அவர், கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்....
மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்:
நேற்று முன்தினம் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசிற்கு வர வேண்டிய நீதி தாமதமாகி உள்ளது. அது தொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதிமுக சார்பில் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை:
ஓபிஎஸ், நானும் பிரிந்தது, பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது.. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமை கழகத்தை, அதிமுகவின் கோயிலை என்று அவர் உடைத்தாரோ அவருக்கு அந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிமுக ஆட்சியில் நிவாரணம் அனைத்தும் அளித்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவ்வாறு இல்லை.
திமுக தவிர எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல:
ஒத்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் சேர்த்து கொள்வோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போதைப் பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை. காவல்துறைக்கு அவர்கள் அச்சபடவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.