தமிழ்நாடு

“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம்

“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம்

webteam

குச்சனூர் கோயில் கல்வெட்டில் தன் பெயர் பொறிக்கப்பட்ட சம்பவம் தனக்கு தெரியாமல் நடந்துவிட்டதாக தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் தெரிவித்தார். 

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள அன்னபூரணி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் நிதியுதவி அளித்திருந்தனர். இதனால், நேற்று ஆலயத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் குமார், ஓ.பி.ஜெயப்பிரதீப்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 

இதில், முக்கியமான விஷயம் என்னவெனில், ரவீந்திரநாத் பெயருக்கு முன்பாக தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என எழுதப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டது. அதுதொடர்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தேனியில் உள்ள பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் நடைபெறும் மறுவாக்குபதிவினை ரவீந்திரநாத் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “நான் அரசியலுக்கு வந்து பல காலமாகியும், முதல் முறையாக தேர்தலில் நிற்கிறேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி. பல தேர்தலை கண்டவர் மற்றும் அனுபவம் மிக்கவர். அவர் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது அவருக்கு சந்தோஷம் தரும் என்றால், அந்தச் சந்தோஷத்தை நான் தருவதில் மிகழ்ச்சி அடைகிறேன்.

கல்வெட்டு விவகாரத்தில் எம்.பி என எனது பெயர் பொறிக்கபட்டு இருப்பது எனக்கு தெரியாமல் நடந்த சம்பவம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.