தமிழ்நாடு

`அதிமுகவின் எந்த விதியை வேண்டுமானாலும் மாற்றலாம்; ஆனால்...’ - சூசகமாக பேசிய ஓபிஎஸ்

webteam

“கழகத்தின் எந்த விதியை வேண்டுமானாலும் மாற்றலாம் ஆனால், தலைமை பொறுப்புக்கு உரியவரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் சட்ட விதியை மாற்றவே முடியாது” என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் குறித்து நூல் எழுதிய எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவர்களுக்கு மாலை அணிவித்து நிதி உதவி வழங்கினார். எம்ஜிஆர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதோடு பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு ஓபன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ் பேசியபோது...  “தமிழக மக்களை எந்த அளவிற்கு எம்ஜிஆர் நேசித்தாரோ அந்த அளவிற்கு இயக்கத்தின் தொண்டர்களையும் நேசித்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தந்தார். உலக அரசியல் வரலாற்றில், அரசியல் கட்சியின் வரலாற்றில் இல்லாத வகையில் தனது இயக்கத்தின் தொண்டர்களுக்கு கவுரவம் தந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

கட்சியை யார் வழி நடத்த வேண்டும் - கட்சியின் தலைவராக யார் வரவேண்டும் என்று அவரை தேர்ந்தெடுக்கும் தார்மீக உரிமையை தொண்டர்களுக்கு தந்த தூய தலைவர் எம்ஜிஆர். அதிமுக தலைமை பொறுப்பிற்கு ஒருத்தர் வரவேண்டும் என்றால் அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் அனைவரும் வாக்களித்து தான் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை தமது இயக்கத்திற்கு உரிமையாக்கியவர் எம்ஜிஆர்.

கழகத்தின் எந்த விதியை வேண்டுமானாலும் மாற்றலாம் ஆனால், கழகத்தின் தலைமை பொறுப்புக்கு உரியவரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் சட்ட விதிகளை மாற்றவே முடியாது என்ற நிலைத்த விதியை கொண்ட இயக்கம் அதிமுக” என சுட்டி காட்டுகிறேன் என்று பேசினார்.