அதிமுகவில் இணைய ஓபிஎஸ் முன்வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதனை நிராகரித்தார். ஓபிஎஸ் அதற்கு 'அது பழைய செய்தி' என பதிலளித்தார். இதனால் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக, அதிமுக கூட்டணியில் அமமுக, அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதேநேரத்தில், தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைய தயார் என்றும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் வெற்றி பெறுவோம் என்றும் கூறியிருந்தார். டிடிவி தினகரனும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இணையவேண்டும் என அழைப்பு விடுத்து வரும் நிலையில், டிடிவி தினகரன் அவருடைய அன்பு அண்ணன் இபிஎஸ்ஸிடம் பேசி முடிவெடுக்க சொல்லுங்கள், நான் இணைய தயார் என்று ஒபிஎஸ் கூறியிருந்தார்.
அதிமுகவில் இணைய தயார் என ஒபிஎஸ் கூறியிருந்ததற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “ஓபிஎஸ்ஸைக் கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் அவரை சேர்க்க முடியாது. கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. எனவே அவரை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்தசூழலில் எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்கு பதிலளித்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம், ‘அது எல்லாம் பழைய செய்தி’ என ஒற்றை வரியில் பதிலளித்துச்சென்றார். ஏற்கனவே தேமுதிக கேட்ட தொகுதி ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக நிராகரித்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்பது புரிகிறது. இந்தசூழலில் தமிழக அரசியல் களத்தில் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.