தமிழ்நாடு

பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கடிதம்

webteam

இலங்கை சிறையில் இருந்து 51 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வபோது கைது செய்யப்படு, அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது, மீன் வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடந்த 5-ம் தேதி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மறுநாள் (ஜன.6) தமிழக மீனவர்கள் 51 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அக்கடிதத்தில் இலங்கை சிறையிலுள்ள 20 மீனவர்களுடன் 118 படகுகளையும் விடுவிக்க கோரியும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க போதிய நிதி ஒதுக்கவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.