தமிழ்நாடு

அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ்ஸுக்கு தடையில்லை - வழக்கறிஞர் திருமாறன் பேட்டி

webteam

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பி.எஸ் தரப்பிற்கு எந்த தடையும் இல்லை என்று ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் வெளியே ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டியது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், அதிமுக அலுவலகம் சாவியை எடப்பாடி வசம் கொடுத்ததற்கு சுவாதீனம் அவரிடம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அதேபோல் பிரிவு 145 படி வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டியது தவறு என ஏற்று கொண்டுள்ளது.

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் கொடுத்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை. அதேபோல் ஓ.பி.எஸ். தரப்பினர் அதிமுக அலுவலகம் செல்ல தடையோ, நீதிமன்றம் அல்லது காவல்துறை அனுமதியோ தேவை எனவும் குறிப்பிடவில்லை.

மேலும், அதிமுக தொடர்பான வழக்கு உரிமையில் நீதிமன்றத்தில் உள்ளது. ஆகையால் எடப்பாடியிடம் சாவி கொடுத்தது தொடர்பாகவே உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை. அதிமுக அலுவலகம் செல்வதற்கு ஓ.பி.எஸ். தரப்பு காவல்துறையிடம் அனுமதி கேட்கவில்லை. பாதுகாப்பு மட்டுமே கேட்கப்பட்டது. அதற்கும் இதுவரை காவல்துறை பதில் அளிக்கவில்லை. அதிமுக அலுவலகம் செல்வது தொடர்பாக ஓ.பி.எஸ் முடிவு செய்வார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.