மனிதாபிமானமற்ற முறையில் சிறிதும் இரக்கமற்ற வகையில் இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகரான கொழும்புவில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடித்தது. அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரி லா, சின்னமான் கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள நீர் கொழும்பில் உள்ள தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், புனித ஈஸ்டர் பெருவிழா நாளில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கொடூரமான வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் தமிழ் கிறிஸ்துவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.