தமிழ்நாடு

“எங்களை கொன்று விடுவார்கள்” : ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

kaleelrahman

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் ஜோடி வெங்கடேஷ் - ஜோதிலட்சுமி. பட்டதாரியான இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததும் இவர்களை கண்காணித்து கண்டித்துள்ளனர்.

இதில், மன உளைச்சல் அடைந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நண்பர்கள் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் இடம் தஞ்சமடைந்தனர். 

“நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமண வயதை அடைந்துவிட்டோம், ஆகையால் எங்களுக்கு சட்டப்படி திருமணம் செய்வதற்கு உரிமை உள்ளது.ஆனால், பெண்ணின் தகப்பனார் கந்து வட்டி தொழில் செய்து வருவதால் எங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக கூலிப்படைகளை வைத்து மிரட்டுகிறார். எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் எங்களை காப்பாற்ற வேண்டும்” எனக் கூறி காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. இதனால் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல் துறையினர் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசி திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.