தமிழக தேர்தல் பணிக்காக முன்னாள் காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் முன் வரவேண்டும் என தமிழக காவல்துறை கூறியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் காவல்துறையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், முன்னாள் இராணுவத்தினர், முன்னாள் தீயணைப்பு வீரர்கள், முன்னாள் துணை இராணுவத்தினர், முன்னாள் சிறைத்துறை காவலர்கள் பணியாற்ற முடியும்.
இந்தப்பணியை அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து செய்யலாம். மேலும் https://bit.ly/Details of Retired Personnel reported for TNAE 2021 என்ற இணைப்பின் மூலமும் விருப்பத்தினை பதிவு செய்யலாம். வரும் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த நான்கு நாட்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அதற்கான ஊதியம் வழங்கப்படும் மேலும், போக்குவரத்து உணவு படிகளும் வழங்கப்படும். இது குறித்து கூடுதல் தகவல் பெற விரும்பும் நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டு அறை எண் 044- 28449201 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்
இந்த பாதுகாப்பு பணிகளுக்கு 30 ஆயிரம் பேர் வரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில் கொரொனா தொற்று அச்சத்தின் காரணமாக ஆர்வமாக யாரும் முன்வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அச்சமில்லாமல் தேர்தல் பாதுகாப்பு பணியில் சேர அழைப்பு விடுக்கிறோம் என்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.