தமிழ்நாடு

தற்போதைய சூழலில் பள்ளிகளை திறப்பது அவசியமான ஒன்று - சௌமியா சுவாமிநாதன்

kaleelrahman

தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நீலகிரி மாவட்டம் ஆனைகட்டி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது அவசியமான ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து இருக்கின்றனர். ஒரு வேளை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று கூறினார்.

"பொதுமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சுகாதார முறைகளை கையாள்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடித்தால் மூன்றாவது அலையின் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்" என்றும் கூறினார்.