தமிழ்நாடு

தொண்டர்கள் நலனை கருத்தில்கொண்டு முடிவு - ஓபிஎஸ் பதிவிட்ட ட்வீட்..!

webteam

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து 7ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 2 ஆம் தேதி, தனது பேரனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பெரியகுளம் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த சனிக்கிழமையன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், மேலூர் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று தனது அலுவலகத்தில் வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன், எம்.எல்.ஏ. வாசுதேவநல்லூர் மனோகரன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோருடன் ஆலோசனை செய்தார். மேலும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

அதிமுகவில் குழப்பம் நிலவிவருவதாக பலரும் கூறிவரும் நிலையில்,  தலைவர்களின் தனிப்பட்ட ஆலோசனைகள் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில்கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! எனக் குறிப்பிட்டுள்ளார்.