தமிழ்நாடு

அமைதியை வலியுறுத்திய ஓபிஎஸ்... மதுரை தொண்டர்கள் செய்த சம்பவம்

kaleelrahman

அதிமுகவிற்கு ஒற்றை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்க வேண்டும் என மதுரை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அதிமுகவின் ஒற்றை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் தொண்டர்களின் பாதுகாவலர் ஐயா ஓபிஎஸ், ஜெயலலிதா (அம்மா) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நிகழ்கால பரதனே கழகத்தின் ஒற்றை தலைமையே!, ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள் என்று அழைக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அதிமுகவை சேர்ந்த முத்து இருளாண்டி, கண்ணன் ஆகியோர் தங்களது புகைப்படங்களுடன் போஸ்டர்களாக ஒட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.