தமிழ்நாடு

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ்

webteam

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிகாரமுள்ள அதிமுக பொதுக்குழுதான் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழிநடத்தி வருகிறோம். காவிரியின் முழு உரிமையையும் பெற்ற அரசு அதிமுக அரசு. யாரும் உரிமை கொண்டாட முடியாது” என்றார்.

தொடர்ந்து ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதது வருத்தமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும், கொடுக்காததும் பாஜகவின் நிலை. அது அவர்கள் எடுக்கின்ற முடிவு” எனத் தெரிவித்தார்.