உதகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வீட்டினுள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அருகே உள்ள புதுமந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (40). இவரது மனைவி கீதா (39). இந்த தம்பதியினர், காய்கறி தோட்டத்தை ஒப்பந்த முறையில் எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இரவு வரை யாரும் வராததால் வீட்டின் அருகே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சந்திரன், கீதா, ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், இவர்களது பிள்ளைகளான ரக்ஷிதா (16) விஷ்வா (11) ஆகிய இருவரும் தரையில் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் உதகை புதுமந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசாதேனைக்காக கொண்டு சென்றனர். பின்னர், இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டினுள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.