தமிழ்நாடு

இரண்டாம் சீசனுக்கான தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா..!

webteam

உலக சுற்றுலா தரவரிசை பட்டியலில் நீலகிரி மாவட்டதிற்கு தனி இடம் உள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா ஸ்தலங்களில் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது வழக்கம், மாவட்டத்தில் நிலவும் இரண்டு கால நிலைகேற்ப சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மே மாத காலத்தில் முதல் சீசனாகவும் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனாகவும் மாவட்டத்தில் நிலவி வருகிறது. தற்போது மாவட்டத்தில் இரண்டாவது சீசனை வரவேற்க்கும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டாம் கட்ட சீசனுக்காக 7500 தொட்டிகளில் பிரான்ஸ் மேரி கோல்டு, பேன்சி மற்றும் லூப்பின் போன்ற மலர் செடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கபட உள்ளதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல் கட்ட பணியாக மலர் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான காலநிலை நிலவி வருவதையடுத்து இன்று அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.