ONGC granted permission to extract oil and gas in Tamil Nadus deep sea PT
தமிழ்நாடு

தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒஎன்ஜிசிக்கு அனுமதி.. என்னென்ன ஆபத்துகள்?

தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒஎன்ஜிசிக்கு அனுமதி.. என்னென்ன ஆபத்துகள்?

PT WEB

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஏலத்தின் 9ஆவது சுற்று, கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 28 இடங்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 596 சதுர அடி கிலோ மீட்டர் பகுதிகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில், கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னை அருகே உள்ள ஆழ்கடலில் ஒரு இடத்திலும் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையை சேர்ந்த வேதாந்தா நிறுவனமும் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த அனுமதியை பெற போட்டியிட்ட நிலையில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கே அந்த வாய்ப்பு சென்றுள்ளது. இந்த 4 இடங்களிலும் 32 ஆயிரத்து 485 சதுர கிலோ மீட்டர் பகுதியில், இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம்சாட்டிவரும் நிலையில், அந்த பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க, ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சுற்றுச்சூழலையும் மீனவர்களையும் பாதுகாக்க தமிழக அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. நாட்டின் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும் அதற்காக சுற்றுச்சூழலையும் கடல் வாழ் உயிரினங்களையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பணயம் வைக்கவேண்டுமா என்ற கேள்விகளும் வலுவாகவே எழுந்துள்ளன. இந்த சூழலில் தமிழக அரசின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.