தமிழ்நாடு

பூந்தமல்லி: விளையாடும்போது விசிலை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

webteam
பூந்தமல்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது விசிலை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பூந்தமல்லி, லட்சுமிபுரம் ரோடு, பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(38). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா. இவர்களுக்கு தர்சன்(3) என்ற மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் வழக்கம்போல் பெண் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து விசிலை எடுத்து விழுங்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்படுவதை கவனித்து குழந்தையை தூக்கியபோது மயங்கிவிழுந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் முதுகில் தட்டியபோது வாயிலிருந்து விசில் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போதுதான் குழந்தை விசிலை விழுங்கியது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பூந்தமல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன குழந்தை கயல்விழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விளையாடும்போது குழந்தை விசில் விழுங்கி இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.