சென்னை மாம்பலத்தில் தாயின் கவனக்குறைவால் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சென்னை மாம்பலம் துக்காராம் 3-வது தெருவில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு முத்துராஜ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்திருக்கிறான். 2-வது மாடியில் இவர்கள் வசித்து வந்திருக்கின்றனர். நேற்று காலை 12 மணி அளவில் தனது துணிகளையெல்லாம் துவைத்து கொண்டிருந்த மகேஸ்வரி, தனது மகன் முத்துராஜை அருகில் 2வது மாடியில் இருந்த மதில் மீது உட்கார வைத்துள்ளார். துணிகளை துவைத்து ஒவொன்றாக மதிலில் முத்துராஜ் அருகில் வைக்கும் போது, துணியை எடுக்க முயன்ற குழந்தை தவறி மதில் மேல் இருந்து கீழே விழுந்தது.
இதில் குழந்தை முத்துராஜின் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் தந்தை கண்ணன் இல்லாத காரணத்தால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் தூக்கி சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை வசதி குறைவாக இருந்த காரணத்தால் உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மாம்பலம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.