தமிழ்நாடு

திருச்சி நகைக்கொள்ளையில் 8 பேர் கும்பல்: சிக்கிய மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை!

திருச்சி நகைக்கொள்ளையில் 8 பேர் கும்பல்: சிக்கிய மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை!

webteam

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடித்தது 8 பேர் கொண்ட கும்பல் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

லலிதா ஜுவல்லரியின் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந் நிலையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மணிகண்டன் திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தில் சிக்கினார். அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ் தப்பிவிட்டார். இதையடுத்து ரகசிய இடத்தில் மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவந்திருப்பதாக தெரிகிறது. 

குறிப்பாக இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது 8 பேர் கும்பல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தப்பியோடிய சுரேஷ் என்பவரின் தாயார் கனகவல்லி மற்றும் குணா, ரவி, மாரியப்பன் உள்பட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுரேஷ் பிரபல வங்கிக் கொள்ளையன் முருகனின் உறவினராவார். எனவே முருகன் தலைமையிலான கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.