நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான இரண்டு மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
எனினும், இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்றாலும், ஒரே நாடு ஒரே தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகே நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாட்டு மக்களும் எதிர்த்து கொண்டிருக்கும் சூழலில், அதை கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்குடன் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற மக்கள் விரோத அராஜக போக்கினை நாட்டு மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிச்சயம் முறியடிப்பார் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்