தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு மீறல்:தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 793 பேர் கைது

webteam

கடந்த 7 நாட்களில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்றோடு எட்டாவது நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர 21 நாட்களுக்கு யாரும் வெளியே வரக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் உத்தரவை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை தரப்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் அதனையும் மீறி தெருக்களில் சுற்றுபவர்கள், அத்தியாவசிய தேவையை தவிர வெளியில் வருபவர்கள் ஆகியோரை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சில இடங்களில் தேவையில்லாமல் வெளியே வருபவர்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைக்கின்றனர். மேலும் சிலருக்கு லத்தி அடி கிடைக்கிறது. சில இடங்களில் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் காவல் துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 7 நாட்களில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.  85,850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு ரூ. 39,36,852 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.