Fire service
Fire service pt desk
தமிழ்நாடு

அரியலூர்: அடுத்தடுத்து மோதி தீப்பிடித்து எரிந்த கார் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

webteam

செய்தியாளர்: வெ.செந்தில் குமார்

அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி செல்வம்பாளுடன், உறவினர் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கடுங்காலி கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வலது பக்கம் சட்டென்று திரும்பியுள்ளார்.

Car Accident

அப்போது பின்னால் நெய்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஓட்டிவந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது இசக்கிமுத்து ஓட்டி வந்த காருக்கு பின்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் மோதாமல் இருக்க, வலது பக்கம் திரும்பியபோது எதிரில் ஜெயங்கொண்டம் நோக்கி செந்துறையை சேர்ந்த அறிவொளி என்பவர் ஓட்டி சென்ற கார் மோதியதில் அறிவொளி ஓட்டி வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உடனே கீழே இறங்கியதால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியலூர் போலீசார், உயிரிழந்த ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்புத் துறையினர், பற்றியெரிந்த காரின் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.