காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 1 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் பேர் ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில், 50 லட்சம் முதல் 1 கோடி மலர்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டும், குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டுகளில் பலத்த வரவேற்பை பெற்ற தாஜ்மகால் வகை ரோஜா மலருக்கும் மற்றும் ரோடோஸ் வகை ரோஜாவிற்கும் இந்தாண்டு கடும் கிராக்கி ஏற்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகளவில், அதாவது 2 கோடி மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடும் பனி மற்றும் குளிர்கால நோய்கள் ரோஜா செடிகளை தாக்கியதால், ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்து போனது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனி இந்தாண்டு நிலவியதாகவும், அதன் காரணமாக மலர் உற்பத்தி குறைந்து விட்டதாகவும் ரோஜா மலர் சாகுபடியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் 1 கோடி மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நல்ல விலை கிடைத்திருப்பதாகவும் ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.