கைது செய்யப்பட்ட சதீஷ்
கைது செய்யப்பட்ட சதீஷ் pt desk
தமிழ்நாடு

சிதம்பரம்: முன்விரோதம் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர் கொலை – ஒருவர் கைது

webteam

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் வேலு என்பவரது மகன், ஆறுமுகம் என்கிற அருண் பாண்டியன். இவர் சிதம்பரம் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அருண் பாண்டியன்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அருண் பாண்டியன், நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று அதிகாலை அண்ணாமலை நகர் திடல்வெளி பகுதியில் அருண் பாண்டியன் கழுத்து துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் அருண் பாண்டியனின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து அருண் பாண்டியனை தொலைபேசியில் அழைத்தது யார் என்ற விசாரணையில் அவரது நண்பரான செந்தில் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செந்திலிடம் நடத்திய விசாரணையில், திடல் வெளிப்பகுதியில் மது அருந்திய போது அங்கு வந்த சதீஷ் என்ற இளைஞர் அறிவாளால் அருண் பாண்டியனை வெட்ட முயன்றுள்ளார் என தெரியவந்துள்ளது. அதை தடுத்த முயன்ற செந்திலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து செந்தில் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அருண் பாண்டியனை, சதீஷ் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

Murder

இதனையடுத்து தலைமறைவாக இருந்த சதீஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சதீஷ், அருண் பாண்டியன் ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். அப்போது பள்ளியில் நடைபெற்ற தகராறு காரணமாக சதீஷ் தனது தந்தையுடன் சென்று அருண் பாண்டியனின் தந்தையிடம் முறையிட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அருண் பாண்டியனின் தந்தை வேலு, சதீஷின் தந்தை சம்பந்தம் என்பவரை அருவாளால் வெட்டினார், அதே நேரம் அருண் பாண்டியன் அருவாளை எடுத்து சதீசையும் வெட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்பகை ஏற்பட்டு நீடித்துள்ளது.

கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பரோடு திடல்வெளி பகுதிக்குச் சென்ற அருண் பாண்டியனை சதீஷ் வெட்டி படுகொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் சதீஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.