பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையிலிருந்து திருநெல்வேலி, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணிகள் அதிக கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், 13ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
வழக்கமாக சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்வதற்கு 1400 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் அதிகபட்சம் 4,200 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.
சென்னையிலிருந்து கோவை செல்ல 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரைகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது அதிகபட்சமாக 3000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு 700 ரூபாய் முதல் 1100 ரூபாய்வரை கட்டணம் இருந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு அதிகபட்சமாக 3500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
நாகர்கோவில் செல்வதற்கு 900 முதல் 1500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகபட்சக் கட்டணம் 4200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
திருச்சி செல்லும் பயணிகள் 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணமாக கொடுத்துவந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்லவேண்டுமானால் அதிகபட்சமாக 3000 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலங்களிலும் தொடர் விடுமுறை நாள்களிலும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள ஆம்னி பேருந்துகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.