இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தொடங்கி தேசிய பல்கலைக் கழங்கள் அளவிலான போட்டிகள் வரை பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் ஊரடங்கு காலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இரட்டையாறு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி ஜோஸ். கடந்த 2014ம் ஆண்டு சீனாவில் நடந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். அதனைத்தொடர்ந்து அஞ்சலி ஜோஸ் மற்றும் அவரது தோழிகளான ஆதிரா சசி, கீது மோகன் ஆகிய மூவரும் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளனர்.
இவர்கள் எர்ணாகுளம் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க நினைத்த இவர்கள் மூவரும் மத்திய அரசின் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இணைந்து தினக்கூலி அடிப்படையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது “ ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும், எங்கள் செலவுக்கான பணத்தை திரட்டவுமே இதில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். தற்போது “ஸ்போர்ட்ஸ் கோட்டா” வில் கிடைக்கவுள்ள அரசு வேலைக்காக காத்திருக்கிறோம். அரசு தாமதிக்காமல் அரசு வேலை வழங்க வேண்டும் ” என்றனர்.