அரியலூரில் மின்னல் தாக்கியதால் வீடொன்றின் தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில், பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி மற்றும் அவரது பேரன் உயிரிழந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேவாங்க முதலியார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மற்றும் ஆறுமுகம். இவர்களின் வீடு அடுத்துடுத்து உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இரவில் ஜெயங்கொண்டத்தில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் மாடியில் வசிக்கும் சுப்ரமணி வீட்டின் தண்ணீர் தொட்டியில் மின்னல் தாக்கி சுவர் இடிந்துள்ளது.
அந்தச் சுவர், ஆறுமுகம் ஓட்டு வீட்டின் மேலே விழுந்திருக்கிறது. இதனால் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தின் அம்மா லெட்சுமி (வயது 85), மூன்றாவது மகன் அஜித் குமார் (வயது 25) ஆகிய இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பயங்கர சத்தத்துடன் விழுந்ததால் அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடி வந்து பார்த்த போது சம்பவம் குறித்து தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் உயிரிழந்த அஜித்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இன்னும் 20 நாட்களில் அஜித்குமாருக்கு திருமணம் ஆக இருந்த, அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி: ராஜஸ்தான்: மின்னல் தாக்கி 7 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு