தமிழ்நாடு

சிமெண்ட் கல்லால் பெரியம்மாவை தலையில் தாக்கியவர் கைது

webteam

சொத்துப் பிரச்னையால் காவல்நிலையில் புகார் தெரிவிக்க சென்ற மூதாட்டியை தலையில் கல்லால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியம்மன் கோவில் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா (35). இவர் தனது தாத்தா லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், தாயார் சரஸ்வதி மற்றும் பெரியம்மா ஜானகி ஆகியோருடன் வசித்து வருகிறார். தான் வசிக்கும் வீட்டை தனக்கே எழுதித் தருமாறும், அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு பெரியம்மா ஜானகியை ராஜா தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு குடித்து விட்டு வந்த ராஜா, வீட்டை எழுதித்தருமாறு பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத ஜானகி, ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். 

அப்போது ஜானகியை மடக்கிய ராஜா, பெரியம்மா என்றும் பாராமல் மூதாட்டி என்றும் இரக்கமின்றி சிமெண்ட் கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால் தலையில் படுகாயமடைந்த ஜானகி, ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். இதையடுத்து உயிருக்கு போராடிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரியவர, அதற்குள் ராஜா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.