தமிழ்நாடு

“நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட அதிகாரிகளே காரணம்?” - நீதிபதிகள் வேதனை

rajakannan

அதிகாரிகளின் மெத்தனப் போக்கே நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட காரணம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கரூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அடையாளம் காட்டிய தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என நீதிபதிகள் கூறினர். 

நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மெத்தனப்போக்கே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டனர். நிறைவேற்றப்படாத உத்தரவுகளுக்காகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நீதிபதிகள் நினைவுகூர்ந்தனர். 
வழக்கு குறித்து கரூர் மாவட்ட டி.எஸ்.பி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், சம்பந்தப்பட்ட குளத்தின் மொத்த அளவு, எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன? எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன? பட்டா எதனடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.