காஞ்சிபுரம் நகராட்சியில் மட்டும் தற்போது வரை 2 லட்சத்து 15 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 332 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளாக 60 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பெரு நகராட்சியை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்தில் 600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் ஒரே பகுதியில் 3-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதால் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி 25 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தகடுகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் நகராட்சியில் மட்டும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து 15 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் தோராயமாக 6 ஆயிரம் நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கோயில் நகரமான காஞ்சிபுரம் நகரில் புகழ்பெற்ற கோயில்களுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ளவரும் பக்தர்களுக்காக சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.