குமரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஓகி புயலில் மாயமான 551 மீனவர்களை கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில், வரும் 22ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோலெனின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு ஒகி புயல் குறித்த முறையான முன்னெச்சரிக்கை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஆழ்கடலில் சிக்கியவர்களை காக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஹெலிகாப்டரை அனுப்பி மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தால் ஏராளமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பார்கள் என கூறப்பட்டிருந்தது. மீனவர் கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17 வரை ஆய்வு நடத்தியதில் 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாததது தெரியவந்திருக்கிறது எனவும், வள்ளவிளையில் 117 பேர், நீரோடி 45 பேர், மார்த்தாண்டந்துறையில் 25 உள்பட மொத்தம் 551 மீனவர்களைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர்களைக் கண்டுபித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா அமர்வு, வரும் 22ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.