தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். செவிலியர்கள் பணி நிரந்தரம், சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நடைபெறும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செவிலியர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் 3ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள், கண், காது, வாய் உள்ளிட்டவற்கை கைகளால் மூடி அரசின் கவனத்தை ஈர்த்தனர். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
செவிலியர்களின் போராட்டத்திற்கு காரணமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசுதான் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒப்பந்த செவிலியர்களின் பிரச்சினைக்கு அதிமுகவே காரணம் என விமர்சித்துள்ளார்.